புதிய மாற்றத்தை உருவாக்க தன்னார்வலர்கள் உழைக்க வேண்டும்; 12,525 கிராம சபைகளிலும் 'வி த லீடர்ஸ்' தொண்டர்கள் பங்கேற்கவேண்டும்; அண்ணாமலை அழைப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களில் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் தன்னார்வலர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 50 முதல் 300 பேர் வரை (ஊராட்சியின் அளவைப் பொறுத்து) பங்கேற்றால் மட்டுமே தீர்மானம் சட்டப்பூர்வமாகும் என்பதால், மக்களை அதிக எண்ணிக்கையில் திரட்ட வேண்டும்.'' என்று அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது;

''தமிழகத்தின் 12,525 கிராமங்களிலும் ஆக.15-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. அடிப்படை மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு 'மாறுவோம் மாற்றுவோம்' என்ற முழக்கத்தோடு செயல்படும் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தன்னார்வலர்கள், தங்கள் ஊர்களில் நடைபெறும் இந்த கூட்டங்களில் பங்கேற்பது மிகவும் அவசியமானது.

கிராம சபை என்பது சண்டை போடும் இடமோ அல்லது அரசியல் மேடையோ அல்ல. இது கிராமத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கான தளம். எனவே, அங்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனச் சகோதர சகோதரிகளை அதிக அளவில் இந்தக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

கிராம சபையில் மாநில அரசு வழங்கியுள்ள 10 முக்கிய அஜெண்டாக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டின் வரவு - செலவு கணக்குகளைச் சரிபார்த்தல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் செயல்பாடுகள். தூய்மையான குடிநீர் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டிகள் பராமரிப்பு. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம். சிறுபாசனக் குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல் தொடர்பான தீர்மானங்கள். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் செல்வதை உறுதி செய்தல் மற்றும் அதில் முறைகேடுகள் ஏதும் உள்ளதா என ஆராய்தல்.

ஸ்வச் பாரத் (தூய்மை பாரதம்) திட்டத்தின் செயல்பாடுகள். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் பயனாளிகள் விவரம். தீன தயாள் உபாத்தியாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டத்தின் பயன்கள். வேளாண்மைத் துறை மற்றும் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பலன்கள் குறித்து பேசப்பட இருக்கிறது. அரசு கொடுத்துள்ள 10 அஜெண்டாக்களைத் தவிர, 11-வது பொருளாக மக்கள் தங்கள் ஊரின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்துப் பேசலாம். அந்தப் பிரச்சனைகளைத் தீர்மானங்களாகக் கொண்டு வந்து அரசுக்கு அனுப்ப தன்னார்வலர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். கிராம சபையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் செல்லுபடியாக வேண்டுமென்றால், மக்கள் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்க வேண்டும்.

எனவே, குறைந்தபட்சம் 50 முதல் 300 பேர் வரை (ஊராட்சியின் அளவைப் பொறுத்து) பங்கேற்றால் மட்டுமே தீர்மானம் சட்டப்பூர்வமாகும் என்பதால், மக்களை அதிக எண்ணிக்கையில் திரட்ட வேண்டும்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க, தேசப்பற்றுடன் நமது வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தைக் கொண்டாட வேண்டும். இந்த கிராம சபை கூட்டங்கள் மூலமாகத் தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க தன்னார்வலர்கள் உழைக்க வேண்டும்'' என்று அண்ணாமலை வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai appeals to We the Leaders volunteers to participate in all 12525 Gram Sabhas


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->