ஆற்றில் ஒளிந்திருந்த அம்பாள்...! – நெல்லையில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள சிலைகள்...! 
                                    
                                    
                                   Ambal hidden river Statues worth crores recovered Nellai
 
                                 
                               
                                
                                      
                                            நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள சக்திகுளம் கிராமத்தில் நேற்று தாமிரபரணி ஆற்றில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வழக்கம்போல் ஆற்றில் குளிக்கச் சென்றபோது, நீரில் புதைந்திருந்த மூன்று பழமையான ஐம்பொன் சிலைகள் அவர்களின் கவனத்துக்கு வந்தன.

அவற்றில் ஒன்று சுமார் 2 அடி உயரம் கொண்டதாக இருந்தது, அதில் காளை மாட்டின் மீது நான்கு கரங்களுடன் அமர்ந்திருக்கும் அம்பாள் சிலை, கையில் சங்கு ஏந்தியவாறு திகழ்ந்தது. மற்ற இரண்டும் 1 அடி உயரம் கொண்ட சிறிய சிலைகள். அவற்றில் ஒன்று ஐந்து முகங்களுடன் வீற்றிருக்கும் அம்மன் சிலை, மற்றொன்று நின்ற நிலையில் இருக்கும் பெண் தெய்வ சிலை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த மூன்று சிலைகளும் பல கோடி ரூபாய் மதிப்புடையவை என்று ஆரம்ப கணக்கீட்டில் கூறப்படுகிறது. உடனடியாக தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவற்றை மீட்டு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டவை?, அல்லது சிலைக் கடத்தல்காரர்கள் பயந்துப் போய் ஆற்றில் வீசிச் சென்றார்களா? என்பது தற்போது அதிகாரிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Ambal hidden river Statues worth crores recovered Nellai