பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: நீரில் மூழ்கிய அமணலிங்கேஸ்வரர் கோயில்..!
Amanalingeswarar temple submerged by wildfires at Panchalinga Falls
திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் திருமூர்த்திமலையில் புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அதிகளவில் வருகின்றனர்.
தற்போது, வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில தினங்களாக திருமூர்த்தி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தோணி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளம், அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தை மூழ்கடித்தபடி திருமூர்த்தி அணைக்கு சென்றது.
இந்த வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் சிலைகள் அமைந்துள்ள கோயில் வளாகத்தில் மட்டுமே தண்ணீர் சூழ்ந்தபடி செல்லும். ஆனால், இரவு கட்டுக்கடங்காத வெள்ளம் காரணமாக அருகில் உள்ள விநாயகர் கோயில், சப்தகன்னியர் கோயில்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகம் பாதியளவுக்கு மூழ்கும் வகையில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றதால், வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மரக்கிளைகள் கோயில் வளாகத்தில் பெருமளவு தேங்கியுள்ளது. இன்று காலை வெள்ளம் குறைந்துள்ளது. ஆனாலும், அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 03வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
English Summary
Amanalingeswarar temple submerged by wildfires at Panchalinga Falls