அலறவிட போகும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் இன்று திறப்பு.!
alanganallur jallikattu stadiyum open today
சட்டசபைக் கூட்டத்தில் தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின் படி மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து ரூ.62 கோடியே 77 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மார்ச் மாதம் 18 அன்று கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் 83 ஆயிரத்து 462 சதுரடி பரப்பில் வாடிவாசல், ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் 3 அடுக்கு பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் புலப்படுத்தும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன் கூடிய தோட்டம் என்று அனைத்தையும் கொண்டுள்ள மிக பிரமாண்டமான கட்டிடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தமிழர்தம் மகத்தான பண்பாட்டுச் சின்னமாக வடிவெடுத்துள்ள உலகின் முதல் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்திற்கு சென்று திறந்துவைக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 500 காளைகள் மற்றும் 300 வீரர்கள் களம் இறங்க டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் வீரர், காளைகளுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதலிடம் பிடிக்கும் காளைக்கு, கார் பரிசுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு காருடன் ரூ.1 லட்சம் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு கார்களை முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வழங்க உள்ளனர்.
English Summary
alanganallur jallikattu stadiyum open today