அதிமுக தொடர்ந்த முக்கிய வழக்கு... உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!
AIADMK case related to Erode East byelection hearing today
ஈரோடு கிழக்கு தேர்தல் தொடர்பாக அதிமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாக அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதுகுறித்து அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இல்லாத 30 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இறந்த வாக்காளரின் பெயர்கள் நீக்கப்படவில்லை எனவும் அதிமுக குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடியால் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளதாகவும் எனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நியாயமாக நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி வரத சக்கரவர்த்தி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "வாக்காளர்கள் அடையாளத்திற்கென பல ஆவணங்கள் இருக்கின்றன. அந்த ஆவணங்கள் அடிப்படையில் தான் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இரட்டை வாக்கு பதிவு தொடர்பான பட்டியல் அனுப்பப்பட்டு தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பின்னர் தான் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். தற்பொழுது புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் உள்ளதால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது" என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து "ஈரோடு கிழக்கு தேர்தலை எப்படி நேர்மையாக நடத்தப் போகிறார்கள். எந்த வகையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது என்பது குறித்தான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என அதிமுக தரப்பு வாதிட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்திவைத்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
திமுக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பது, ஆடு மாடுகளை போல் பணிமனை என்ற பெயரில் வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்திருப்பது, வாக்காளர்களை சுற்றுலா அழைத்து செல்வது போன்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
English Summary
AIADMK case related to Erode East byelection hearing today