துணை முதலமைச்சராக உதயநிதி - ஒரே வார்த்தையில் போட்டு தாக்கிய எடப்பாடி பழனிசாமி!
ADMK Edappadi Palanisamy Say About TN Deputy CM Post
முதலமைச்சர் ஸ்டாலின் மகனுக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இன்று சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், "திராவிட முன்னேற்றக் கழகம் குடும்பக் கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது குடும்ப ஆட்சியும் நடத்திக் கொண்டிருக்கிறது.

துணை முதலமைச்சர் பதவியை ஸ்டாலினின் மகனுக்கு வழங்குவதை ஏற்க முடியாது. திமுகவில் மூத்த, முன்னோடி நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்களில் யாருக்காவது ஒருவருக்கு துணை முதலமைச்சர் பதவியை ஏன் வழங்க முன்வரக்கூடாது?
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இப்போது வரை மூன்று லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இந்த திமுக அரசு கடனில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏழை எளிய தொழிலாளர்களுக்காக குறைந்த விலையில், சுவையான உணவு கிடைக்க வேண்டும் என்று அம்மா உணவகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் திமுக ஆட்சியில் சரியான முறையில் பராமரிக்கப்படாமல், தரமான பொருட்கள் வழங்காமல் அம்மா உணவகத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துள்ளது.
தற்போது வரை திமுக ஆட்சியில் 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அண்மையில் சென்னையில் அம்மா உணவகத்தில் முதலமைச்சர் சோதனை செய்தார். இந்த மூன்றாண்டு காலமாக ஒருமுறை கூட ஏன் அவர் இந்த சோதனையை மேற்கொள்ளவில்லை?

உண்மையிலேயே அம்மா உணவகத்தின் மீது அக்கறை இருந்தால், இந்த மூன்று ஆண்டுகளில் ஆட்சியாளர்கள் எத்தனை முறை ஆய்வை மேற்கொண்டு இருக்க வேண்டும்? இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு இப்போது ஆய்வு நடத்தி என்ன பயன்?
அம்மா உணவகத்தை சரிவர கவனம் செலுத்தாத திமுக அரசின் மீது, ஏழை எளிய தொழிலாளர்கள் வெறுப்பில் உள்ளனர். இதன் காரணமாகத்தான் இந்த ஆய்வை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் நடத்தியுள்ளார்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
English Summary
ADMK Edappadi Palanisamy Say About TN Deputy CM Post