பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு...! என்னென்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்...? - கல்வித்துறை வெளியிட்ட முக்கிய விளக்கம்...!
Action orders schools What steps should be taken Important explanation issued by Department of Education
2026-27-ம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, புதிய கல்வியாண்டை முன்னிட்டு பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு வழிகாட்டுதல்கள் விரிவாக வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளி வளாகம் முழுவதும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து வகுப்பறைகள், சமையலறைகள், கழிவறைகள், தலைமை ஆசிரியர் அறை, குடிநீர் தொட்டிகள் மற்றும் கை கழுவும் இடங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்த ஏற்ற வகையில் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளியின் பெயர் பலகைகள் தொலைவிலிருந்தே தெளிவாக காணப்படும் வகையில் புதுப்பிக்கப்பட்ட வர்ணப்பூச்சுகளுடன் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட் கருவிகள் அனைத்தும் முறையாக செயல்படும் நிலையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-27-ம் கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்டப் பொருட்கள் அனைத்து மாணவர்களுக்கும் உரிய காலத்தில் சென்றடைய திட்டமிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதற்காக மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி, கல்வி உதவித்தொகைகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு இலவச நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளி வளாகங்கள் அருகே விளம்பர பலகைகள் அமைத்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை தையல் பணிகள், விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை அச்சிடப்பட்ட இலவச நோட்டுப்புத்தகங்களில் 92.18 சதவீதம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பாடப்புத்தகங்கள் 100 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலவச சீருடை தையல் பணிகளில் 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில், 71 சதவீத சீருடைகள் மாணவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Action orders schools What steps should be taken Important explanation issued by Department of Education