கோவையில் சர்வதேச தரத்தில் தயாராகும் விளையாட்டு போட்டி உள் அரங்குகள்; விரைவில் திறக்கப்படும்; மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு..!
A world class sports facility is being developed in Coimbatore and will be inaugurated soon
கோவையில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் வகையிலும் அமைக்கப்படும் உள், வெளி அரங்குகளுக்கான பணிகள் விரைவில் நிறைவடையும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி 83-வது வார்டு நேரு விளையாட்டரங்கம் அருகே, மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு போட்டிக்கான அரங்குகள் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று ஆய்வு செய்தார். அப்போது உதவி ஆணையர் ச.நா.சண்முகம், உதவி பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்த அரங்கில் கைப்பந்து, இறகுப்பந்து, கபடி மற்றும் வுஷூ உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிக்கான உள்விளையாட்டு அரங்கங்களின் பணிகளையும், தற்போதைய நிலையையும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வுக்கு பின் அவர் பேசும் போது கூறியதாவது: மாநகராட்சி பொது நிதியின் கீழ், ரூ.02 கோடி மதிப்பீட்டில் கைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறதாக குறிப்பிட்டார்.
அத்துடன், கோவை எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில், பார்வையாளர்கள் அரங்கம் அமைக்கும் பணியும், அதே விளையாட்டு மைதானத்தில், தனியார் பங்களிப்புடன் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மேற்கூரையுடன் கூடிய இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியும் நடந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், மாநகராட்சி பொதுநிதியின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில், மேற்கூரையுடன் கூடிய கபடி உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி மற்றும் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரையுடன் கூடிய வுஷூ தற்காப்பு உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாக குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், இன்னும் 02 வாரங்களுக்குள் உள் அரங்கு பணிகள் முழுமை பெறும் மற்றும் உள்விளையாட்டு அரங்குகள் விரைவில் திறக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த விளையாட்டு அரங்கம் நல்ல தரத்தில் இருப்பதால் விளையாட்டு பிரியர்களுக்கு அதிகம் பயன்படும் என்பதால், இந்த உள் அரங்குகளுக்கான தேவை அதிகம் இருக்கும் என எதிர்பாப்பதாகவும் கூறினார்.
English Summary
A world class sports facility is being developed in Coimbatore and will be inaugurated soon