கொரோனா : புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய தமிழக மருத்துவர்கள்!
74 year old corona patient discharged after her recovery
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த சென்னை பொழிச்சலூரை சேர்ந்த 74 வயது மூதாட்டி சிகிச்சைக்கு பின் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
கடந்த மார்ச் 26ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூச்சுத்திணறலுக்கு அனுமதிக்கப்பட்டவர். பொழிச்சலூரை சேர்ந்த 74 வயது மூதாட்டி. பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு பொது மருத்துவமனை குழுவால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று 8 4 2020 பூரண குணமடைந்து வீட்டிற்கு செல்கிறார்.
இவருக்கு கரோனா மட்டும் இல்லாமல் உயர் ரத்த அழுத்தமும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்களின் தீவிர முயற்சியினால் இவர் காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஆர் ஜெயந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி மற்றும் டாக்டர் ரகுநந்தன் மற்றும் மருத்துவ குழு, செவிலியர்கள் இவருக்கு பழக்கூடை கொடுத்து இவரை வாழ்த்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 21 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய் இருந்தும் 74 வயது மூதாட்டியை தமிழக மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளது அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
74 year old corona patient discharged after her recovery