ஏற்காட்டில் 49-வது கோடை மலர் கண்காட்சி நாளை தொடக்கம்; சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு..!
49th Summer Flower Show Begins Tomorrow in Yercaud
சேலம் மாவட்டத்தின் முதன்மை சுற்றுலாதலமான ஏற்காடு 'ஏழைகளின் ஊட்டி' என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நடப்பாண்டு 49-வது கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நாளை (வெள்ளி) தொடங்கி வரும் 28-ஆம் தேதி வரை 07 நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.
நாளை நடக்கும் இந்த மலர்கண்காட்சி தொடக்க விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளது. கோடை விழாவை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தோட்டக்கலைத்துறையின் சார்பில், அண்ணா பூங்காவில் 02 லட்சம் மலர்களை கொண்டு மலர்க்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகள் அமைக்கப்படுகிறது.

அத்துடன், காளை மாடு, கன்றுக்குட்டியுடன் கறவை பசு, முயல், வாத்து, ஆடு, நாய், கோழி, சேவல் உள்ளிட்ட வடிவமைப்புகள், டெடி பியர், தேவதை, பரதநாட்டிய மங்கைகள், இரட்டை இதயம், மான் உருவம், பிறை நிலா, சிறகுகொண்ட இதயம் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள், வண்ண மலர்களை கொண்டு அமைக்கப்படுகிறது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணமலர் தொட்டிகள் இங்கு காட்சிப்படுத்தப் படவுள்ளது.
மேலும், தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் மலை, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஏற்காடு மலைப்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், கனரக மற்றும் 04 சக்கர வாகனங்கள், ஏற்காடு செல்ல கோரிமேடு-அடிவாரம் வழியாகவும் கீழே இறங்கும் போது கொட்டச்சேடு-குப்பனூர் சாலை வழியாக செல்ல ஒருவழிப் பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது. கோடை விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
49th Summer Flower Show Begins Tomorrow in Yercaud