'போதிய அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது'; தவறான செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்; மத்திய அரசு அறிவிப்பு..!
The Central Government has announced that there are adequate stocks of petrol and diesel at all petrol stations
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மூலம், நாட்டு மக்களுக்குத் தேவையானவற்றை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இது தொடர்பாக டில்லியில் தேசிய ஊடக மையத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகங்களின் அதிகாரிகள், நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பு, கடல்சார் செயல்பாடுகள் மற்றும் முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப் பராமரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையிலும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எல்பிஜி தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை குறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தற்போதைய எரிபொருள் விநியோக நிலவரம் குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அளித்துள்ள தகவலின் படி, பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், மக்கள் அச்சத்துடன் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான தவறான செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முன்பதிவு தளங்களைப் பயன்படுத்தவும், விநியோகஸ்தர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேப்போன்று, பிஎன்ஜி மற்றும் மின்சார அல்லது இன்டக்ஷன் அடுப்புகள் போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவை இன்றி அனாவசியமாக அனைத்து மக்களும் தங்களின் அன்றாடப் பயன்பாட்டில் எரிசக்தியை சேமிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர், வீட்டு உபயோக பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி (போக்குவரத்து) ஆகியவற்றிற்கு, 100% விநியோகம் செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
அதேப்போன்று, வர்த்தக ரீதியிலான எல்பிஜியைப் பொறுத்தவரை, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மருந்து, எஃகு, ஆட்டோமொபைல், விதை, விவசாயம் போன்ற துறைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான 05 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர் விநியோகமும், சராசரியின் அடிப்படையில் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
The Central Government has announced that there are adequate stocks of petrol and diesel at all petrol stations