#BREAKING: இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் 4 பெண்கள் உயிரிழப்பு...!!
4 women killed in free vetti saree event in Tirupattur
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா பாலம் அருகே வாரச்சந்தை மைதானத்தில் ஐயப்பன் ப்ளூ மெட்டல்ஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் தைப்பூசத்தை முன்னிட்டு நாளை இலவச சேலைகள் வழங்குவதற்கான டோக்கன் இன்று விநியோகம் செய்யப்பட்டது.
இந்த தகவல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியதால் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் டோக்கன் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் கூடினர்.

இதனை அடுத்து டோக்கன் வழங்க தொடங்கிய பொழுது ஒட்டுமொத்த பெண்களும் ஒரே நேரத்தில் சூழ்ந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கமடைந்த நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பெண்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கூட்ட நெரிசலில் படுகாயம் அடைந்த மேலும் சிலரை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்களில் சிலர் கண்விழிக்காததால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
4 women killed in free vetti saree event in Tirupattur