கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்; மக்கள் பீதியடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை..!
3 magnitude earthquake in Krishnagiri
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்றிரவு (புதன்கிழமை) நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.0 அளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிலாளம் அருகே கர்த்தக்கல் முனியப்பன் கோயில் பகுதியில் இரவு 7.52 மணிக்கு பூமிக்கு அடியில் 10 அடி ஆழத்தில் 3.0 ரிக்டர் அளவில் மிகவும் லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நில அதிர்வு ஏற்பட்ட பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டருக்கு எவ்வித வீடுகளோ, கட்டிடங்கள் இல்லை. மேலும், நில அதிர்வு ஏற்பட்ட பகுதியில் இருந்து கீழ்நோக்கி தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதிகளிலும் லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளது.

மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவாகும் நில அதிர்வுகளால் கட்டிடங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. இது பூமியின் உள்அமைப்பில் ஏற்படும் மிகச் சாதாரணமான ஒரு சிறிய அழுத்த வெளியீடு மட்டுமே. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கூடுதல் அதிகாரப்பூர்வ தகவல்களை மத்திய அரசின் நில அதிர்வு அறிவியல் மைய இணையதளம் www.seismo.gov.in அல்லது BhooKamp செயலி வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்.'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
3 magnitude earthquake in Krishnagiri