''பழநி முருகன் கோயில் நிலம் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்''; இபிஎஸ் வலியுறுத்தல்..!
EPS insists on CBI investigation into Palani Murugan Temple land scam case
''பழநி முருகன் கோயில் சொத்து முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும்'' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதவது;
''பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோயில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ கிளரிக்கல் எரர் போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல.
தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல். இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா?.
இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழநி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு பவர் சென்டர் தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே பவர் சென்டர் என்று சொன்ன முதல்வர் விஜய், இந்த ஊழலில் பின்னால் யார் அந்த பவர் சென்டர்?.
அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனை பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த பவர் சென்டர்?.
இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது. நேர்மையான விசாரணை நடைபெற, பழநி முருகன் கோயில் சொத்து முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
EPS insists on CBI investigation into Palani Murugan Temple land scam case