''காவல் மரணங்கள் ஏற்படுவதை ஏற்க முடியாது; இது குறித்து முதல்வர் கருத்து சொல்ல வேண்டும்''; மு.வீரபாண்டியன்..!
M Veerapandian says the Chief Minister should comment on police deaths
''காவல் மரணங்கள் ஏற்படுவதை ஏற்க முடியாது. விசாரணைக்கு உத்தரவிட்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இது குறித்து முதல்வர் கருத்து சொல்ல வேண்டும்''என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும் போது மு.வீரபாண்டியன் கூறியதாவது;
நிலமற்ற ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், காரைக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், பொதுவுடமை, மதசார்பின்மை, பன்முகத் தன்மை ஆகியவற்றை பாதுகாக்கவும், தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியா முழுவதும் 10 நாட்கள் நடைபயண இயக்கத்தை நடத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, செப்டம்பர் 01-ஆம் தேதி புது டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற உள்ளதாகவும், இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அத்துடன், ஈரான் மீது அமெரிக்கா அடாவடித்தனமாக யுத்தம் தொடுத்துள்ளது.இதனால் உலகம் மீண்டும் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகிறதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகள் மட்டுமின்றி, உலகத்தையே அமெரிக்கா பதற்றத்துக்கு உள்ளாக்கி வருகிறதோடு, இதை மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமரான மோடி பார்வையாளராக பார்த்து கொண்டிருக்க கூடாது என்றும், அவர் அமெரிக்க அதிபரை கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன், வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பாதுகாக்க மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு. வீரபாண்டியன்; ''காவல் மரணங்கள் ஏற்படுவதை ஏற்க முடியாது. விசாரணைக்கு உத்தரவிட்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இது குறித்து முதல்வர் கருத்து சொல்ல வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். அத்துடன், மேகேதாட்டுவில் அணை கட்ட கூடாது எனவும், தமிழர்களின் உரிமையை பறிக்க கூடாது என்று கூறியதோடு, 02 மாநிலங்களின் நல்லுறவைக் கெடுக்கின்ற வகையில் கர்நாடக அரசு செயல் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

மேலும், இந்த தேசத்தின் இயற்கை வளங்களை முதலாளிகள் அபகரிக்கின்றதாகவும், இயற்கை வளங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும் என்றும், அதை சூறையாடுவதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேப்போன்று, எங்களுக்கு நாடு முழுவதும் அமைப்பு இருக்கிறது, தலைவர்கள் இருக்கின்றனர். உழைக்கும் மக்கள் இருக்கின்றனர். எங்களுக்கான சூழல் வரும்போது தனித்து தேர்தலில் களம் காண்போம் என்றும் கூறியுள்ளார்.
தற்போது மக்களின் தீர்ப்பை மதித்து தவெக அரசுக்கு ஆதரவளித்து வருவதாகவும், இந்த அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம். தவறிழைத்தால் எதிர்ப்போம் என்று கூறியதோடு, முதலாளித்துவ சமுதாய அமைப்பே லஞ்சம், ஊழலின் ஊற்றுக்கண். 40 பேர் உழைப்பதை 04 பேர் உறிஞ்சுகின்றனர். அதை நமது சட்டமும், நீதிமன்றமும் வேடிக்கை பார்க்கிறது. ஊழலில்லாத சமூகத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று சூளுரைத்துள்ளார்.

அத்துடன், நாடு சோசலிசம், இடது சிந்தனையை நோக்கி நகர வேண்டும் என்றும், குதிரை பேரம் ஏற்புடையது அல்ல. இது ஜனநாயகத்துக்கு ஏற்படுகின்ற இழுக்கு என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் குற்றங்கள் குறைய ஆட்சி, கட்சி, தலைவர்கள் மாறுவதால் மட்டுமல்ல; அடிப்படையில் சமூகம் மாற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எங்களிடம் முதல்வரா? தூய்மைப் பணியாளரா? என்று கேட்டால் நாங்கள் தூய்மைப் பணியாளர் பக்கம் தான் நிற்போம் என்று கூறியதோடு, தனியார்மயம் என்பது நல்லதல்ல. என்எல்சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்கிறது. அதை நாங்கள் பாதுகாக்க போராடுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், என்எல்சி பங்குகளை விற்றால், தமிழக அரசே வாங்க வேண்டும் என்றும், என்எல்சி தொடர்பாக முதல்வர் எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
English Summary
M Veerapandian says the Chief Minister should comment on police deaths