26 புதிய வாகனங்கள்.. பயன்பாட்டினை தொடங்கி வைத்த மேயர் பிரியா!
26 new vehicles Mayor Priya has initiated their use
26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார், இதில் 5 நாய் பிடிக்கும் வாகனங்களும் இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கபப்பட்டது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலை பராமரிப்புப் பணிகளுக்காக 21 மின்கல வாகனங்கள் மற்றும் நாய்களைப் பிடிக்கும் 5 வாகனங்கள் என 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சாலைகளில் பராமரிப்புப் பணிகளை சாலைப்பணியாளர்கள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, IDBI வங்கி மற்றும் எக்விட்டாஸ் வங்கியின் சார்பில் பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட 21 மின்கல வாகனங்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திடும் வகையில், மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் தலா ரூ.10.43 லட்சம் என மொத்தம் ரூ.52.17 லட்சம் மதிப்பீட்டிலான 5 நாய் பிடிக்கும் வாகனங்கள் இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கபப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையாளர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், துணை ஆணையாளர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, துணை ஆணையாளர் பிரதிவிராஜ், நிலைக் குழுத் தலைவர்கள் டாக்டர் கோ. சாந்தகுமாரி , சர்பஜெயாதாஸ் (வரி விதிப்பு, த.விஸ்வநாதன் , ஐடிபிஐ வங்கியின் மண்டல தலைமை பொது மேலாளர் மஞ்சுநாத் பாய், ஈக்விடாஸ் சிறு நிதி வங்கியின் துணைத் தலைவர் டி.அஞ்சான், மண்டல மேலாளர் யு.கமல்நாத் மற்றும் மாநகராட்சி தலைமைப் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
26 new vehicles Mayor Priya has initiated their use