சி.வி. ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா; மேற்கு வங்க ஆளுநராகும் ஆர்.என். ரவி..?
Will RN Ravi become the Governor of West Bengal after the sudden resignation of Ananda Bose
மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பதவியேற்ற இவர் 3.5 ஆண்டுகள் பதவியில் இருந்த நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள லோக்பவனில் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இவரின் திடீர் ராஜினாமா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிகையில்,''ஆளுநர் அலுவலகத்தில் நான் போதுமான நேரத்தைச் செலவிட்டுவிட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தை போன்று மேற்குவங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அம்மாநில ஆளுநரின் இந்த திடீர் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, ஆனந்த போஸின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மேற்குவங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாவது;
அவரது ராஜினாமாவுக்கான காரணங்கள் தற்போது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும்போது, வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சில அரசியல் நலன்களுக்காக மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து ஆளுநருக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ராஜினாமா தொடர்பாக அவர் என்னிடம் எதுவும் ஆலோசிக்கவில்லை என்றும், இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் மாண்பைச் சீர்குலைப்பதுடன், நமது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையையே தாக்குகின்றன என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு 'கூட்டுறவு கூட்டாட்சி' (Cooperative Federalism) கொள்கைகளை மதிக்க வேண்டும் என்றும், மேலும், ஜனநாயக மரபுகளைச் சிதைக்கும் வகையிலும் மாநிலங்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
English Summary
Will RN Ravi become the Governor of West Bengal after the sudden resignation of Ananda Bose