15வது ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று பலப்பரீட்சை.. யாருக்கு பலம் அதிகம்.?
IPL 2022 CSK vs KKR
ஐபிஎல் 15 வது சீசனின் முதல் போட்டி இன்று மும்பையில் தொடங்குகிறது. இந்த சீசனில் 10 அணிகள் இடம் பெற்று உள்ளது. அதிக தடவை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதிச்சுற்றுக்கு நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ-வில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. குரூப் பி-யில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் ஒரு வீரராக எம்எஸ் தோனி சென்னை அணியில் நீடிப்பது அணிக்கு பலம் ஆகும். கடந்த சீசனில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்பை வசப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, பிராவோ, டேவன் கான்வே, உத்தப்பா ஆகியோர் இருப்பது அணிக்கு நம்பிக்கையை தருகிறது.
கொல்கத்தா அணியை பொருத்தவரை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ஆண்ட்ரு ரஸ்செல், நிதிஷ் ராணா, சுனில் நரேன், வரும் சக்கரவர்த்தி, டிம் சவுத்தி ஆகியோர் அணிக்கு மேலும் பலத்தை சேர்ப்பார்கள் என கூறப்படுகிறது.
இதுவரை 25 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் 17 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 8 போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.