இந்திய துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவான் ஜஸ்பால் ராணா மாரடைப்பால் காலமானார்: பிரதமர் மோடி, விளையாட்டு உலகம் ஆழ்ந்த இரங்கல்!
Indian Shooting Legend and Renowned Coach Jaspal Rana Passes Away at 49 PM Modi Leads Tributes
இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் துறையின் முடிசூடா மன்னனாகவும், புகழ்பெற்ற தேசியப் பயிற்சியாளராகவும் விளங்கிய ஜஸ்பால் ராணா (49) திடீர் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி இந்திய விளையாட்டு உலகை உலுக்கியுள்ளது அத்தோடு ஒட்டுமொத்த தேசத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விளையாட்டுலகில் நிகரற்ற சாதனைகள்
தனது அபார திறமையால் 1990 மற்றும் 2000-களில் உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர் ஜஸ்பால் ராணா. காமன்வெல்த் போட்டிகளில் 9 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று இந்தியாவின் மிக வெற்றிகரமான சாதனையாளராகத் திகழ்ந்தார். 1994 ஆசிய விளையாட்டுகளில் தங்கம் வென்றது முதல், 2006 தோஹா ஆசிய போட்டியில் உலக சாதனைப் புள்ளிகளைச் சமன் செய்து 3 தங்கப் பதக்கங்களை வாரிக் குவித்தது வரை இவரது துல்லியமான இலக்குகள் என்றும் அழியாதவை. இவரது அசாத்திய பங்களிப்பைப் பாராட்டி மத்திய அரசு அர்ஜுனா, பத்மஸ்ரீ மற்றும் உயரிய துரோணாச்சாரியார் விருதுகளை வழங்கி கௌரவித்தது.
சாதனையாளர்களை உருவாக்கிய சாணக்கியன்
வீரராக மட்டுமன்றி ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் ஜஸ்பால் ராணா அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கினார். அண்மையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இரட்டை வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை மனு பாகரின் பிரதான பயிற்சியாளராக இருந்து, அவரது சரிவிலிருந்து மீட்டு வழிநடத்திய பெருமை ராணாவையே சேரும். அண்மையில் ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்த உலகக் கோப்பை தொடரை முடித்துவிட்டுத் திரும்பிய அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பிரதமர் மற்றும் தலைவர்கள் இரங்கல்
பிரதமர் மோடி இரங்கல்: ஜஸ்பால் ராணாவின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜஸ்பால் ராணாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவு இந்திய விளையாட்டு உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, “இந்திய துப்பாக்கிச்சுடுதல் ஜாம்பவான் ராணாவின் மறைவு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் நம் நாட்டிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகள், ஒரு உத்வேகம் அளிக்கும் மரபை விட்டுச் சென்றுள்ளன. ஓம் சாந்தி.” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒலிம்பிக் சாம்பியன்களான அபிநவ் பிந்த்ரா, ககன் நரங், விஜய் குமார் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டுச் சமூகமும் திரண்டு தங்களது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
English Summary
Indian Shooting Legend and Renowned Coach Jaspal Rana Passes Away at 49 PM Modi Leads Tributes