வரலாற்று வெற்றியை பெற்ற இந்தியா! கில், பாண்ட் அதிரடியில் தொடரை வென்றது!
India won the match and series against Australia in Australia
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணியானது நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவில் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முதல் மூன்று டெஸ்ட் போட்டியின் முடிவில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது.
கடந்த 34 வருடங்களாக இந்த மைதானத்தில் ஆஸ்ட்ரேலிய அணி தோல்வி கண்டதில்லை என்ற சாதனையுடனும், இந்திய அணி இந்த மைதானத்தில் இதுவரை வெற்றியை கண்டது இல்லை என்ற மோசமான நிலையிலும் இந்த போட்டியில் களமிறங்கியது.
முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கி ஆஸ்திரேலிய அணி 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இன்று மேற்கொண்டு 98 ஓவர்களில் 324 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய உடனேயே ரோஹித் ஷர்மா 7 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கில் அபாரமாக விளையாடி 91 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரஹானே அதிரடியாக விளையாடி 24 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் நங்கூரமிட்டு நின்றுகொண்டிருந்த புஜாரா அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த ரிஷாப் பாண்ட் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். மயங்க் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் பாண்ட்க்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்து, வெற்றியை நெருங்கும் வேளையில், 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரிஷாப் பாண்ட் (89*) இறுதிவரை நின்று அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
English Summary
India won the match and series against Australia in Australia