இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா.. இந்திய அணி அபார வெற்றி.!
India won by 59 runs against West Indies
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் நேற்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி இந்திய அணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் (33), சூர்யகுமார் யாதவும் (24) சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்த தீபக் ஹூடா 21 ரன்களும், ரிஷப் பண்ட் 44 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். சஞ்சு சாம்சன் 30 ரன்களும், கடைசியில் அக்சர் படேல் அதிரடியுடன் 20 ரன்களையும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. தொடக்கம் முதலே தடுமாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இறுதியில் அந்த அணி 19.1 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இதே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
English Summary
India won by 59 runs against West Indies