ஐம்பெரும் சிறப்புகள்.. 65 விதமான வற்றாத சுனை ஊற்றுகள்.. அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோயில்.!
Today special thoranaimalai temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
திருநெல்வேலி மாவட்டம் கடையம் என்னும் ஊரில் அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் கடையம் என்னும் ஊர் உள்ளது. கடையத்திலிருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தலம் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், தவம், தியானம் ஆகிய ஐம்பெரும் சிறப்புகளை உடையது.
தோரணமலை குகையில் முருகப்பெருமான் தரிசனம் தருகிறார். இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
வேறெங்கும் காண இயலாத 65 விதமான வற்றாத சுனை ஊற்றுகள் தோரணமலையில் உள்ளன.
மலை அடிவாரத்தில் வல்லப விநாயகர், சப்தகன்னியர், குருபகவான் மற்றும் நவகிரகங்களுக்கு தனிச்சன்னதிகள் அமைந்துள்ளது. மேலும் சுதையாலான சிவபெருமான், சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் சன்னதிகளும் உள்ளது.
மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச்சன்னதியில் சுதையாலான பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
வேறென்ன சிறப்பு?
தோரணமலை முருகன் பக்தர்களின் நோய்களை தீர்க்கும் கடவுளாக விளங்குகிறார். முருகப்பெருமானின் இடதுபுறம் இருக்கும் சற்று உயரமான சுனை, புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனையில் இருந்துதான் முருகப்பெருமானின் அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்துவரப்படும். மலை உச்சியில் பெரும் பாறைக்கு இடையில் இப்படி ஊற்று பொங்கி வருவது சிறப்பம்சமாகும்.
அதேபோல் முருகப்பெருமானின் வலதுபுறம் உள்ள பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு பொந்து ஒன்று உள்ளது. அதுவும் ஒரு சுனைதான். அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். இதன் எதிரே ராமர் பாதமும், அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனிச்சன்னதியும் உள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
கிருத்திகை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் தைப்பூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாள் ஆகியவை முக்கிய திருவிழாக்களாக இங்கு கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை தீர, எதிரிகளின் தொல்லை அகல, நோய்கள் குணமாக, சொத்துத்தகராறு, குடும்பத்தகராறு நீங்க, கல்வி, வேலைவாய்ப்பு, திருமண வரம், மகப்பேறு, உயர்பதவி ஆகியவை கிடைக்கவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special thoranaimalai temple