மூலஸ்தானத்தில் சிவனும், பெருமாளும்.. கையில் நாகத்துடன் விநாயகர்.. சங்கர நாராயணர் திருக்கோயில்.!
Today special thirunelveli Sankara narayanar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் என்னும் ஊரில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருநெல்வேலியில் இருந்து சுமார் 64 கி.மீ தொலைவில் சங்கரன்கோவில் என்னும் ஊர் உள்ளது. சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் சிவனும், பெருமாளும் இணைந்து ஒன்றாக காட்சியளிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இத்தலத்தில் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். எனவே இவருக்கு அபிஷேகம் நடைபெறாது. இச்சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் நடைபெறும்.
இக்கோயிலின் நுழைவு வாயிலில் அதிகார நந்தி, தன் மனைவியுடன் காட்சி தருவது சிறப்பு.
பொதுவாக சிவன் சன்னதி கோஷ்டத்தின் பின்புறத்தில் லிங்கோத்பவர் அல்லது திருமால் இருப்பார். ஆனால் இங்கு 'யோக நரசிம்மர்" அருள்பாலிக்கின்றார்.
வேறென்ன சிறப்பு?
சிவன் சன்னதி பிரகாரத்தில் வன்மீகநாதர் சன்னதி இருக்கிறது. புற்று வடிவில் அமைந்த இச்சன்னதியில் சிவன் தலைக்கு மேலே குடை பிடித்தபடி இருக்கும் நாகத்தின் மீது அமர்ந்திருப்பது அபூர்வ அமைப்பாகும்.
இச்சன்னதி எதிரில் பஞ்ச நாக சிலைகள் உள்ளது. பக்தர்கள் இச்சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்கிறார்கள்.
இத்தலத்தில் ஆடித்தபசு விழா 12 நாட்கள் நடைபெறும். இது அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளன்று அம்பிகை தபசு மண்டபத்தில் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். பின் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்கு செல்வார்.
இக்கோயிலில் 'சர்ப்ப விநாயகர்" கையில் நாகத்துடன் காட்சி தருகிறார். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்தும், பால் பாயசம் படைத்தும் வேண்டி கொள்கிறார்கள்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஆடித்தபசு, பங்குனி மற்றும் சித்திரையில் 41 நாட்கள் பிரம்மோற்சவம், ஐப்பசியில் திருக்கல்யாணம் ஆகியவை இத்தலத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
இத்தலத்தில் திருமணத்தடை மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்கள் மாவிளக்கில் நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும், நெய்வேத்தியம் படைத்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special thirunelveli Sankara narayanar temple