சிவன் பள்ளி கொண்ட நிலை.. தாராவுடன் தட்சிணாமூர்த்தி.. அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்..!
Today special Palli kondeshwarar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
ஆந்திர பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள சுருட்டப்பள்ளி என்னும் ஊரில் அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சித்தூரில் இருந்து சுமார் 99 கி.மீ தொலைவில் சுருட்டப்பள்ளி என்னும் ஊர் உள்ளது. சுருட்டப்பள்ளியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
எங்குமே காணமுடியாத கோலத்தில் இங்கு சிவன் பள்ளி கொண்ட நிலையில் காட்சியளிக்கிறார்.
இத்தலத்தில் சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், 'பள்ளி கொண்டீஸ்வரர்" என பெயர் பெற்றார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல மூலவரை வால்மீகிஸ்வரர் என்கிறார்கள்.
மூலவர் சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும், பதுமநிதியும் காட்சி தருகின்றனர்.
இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.
பள்ளி கொண்ட வால்மீகிஸ்வரர்-மரகதாம்பிகை, விநாயகர்-சித்தி, புத்தி, சாஸ்தா-பூரணை, புஷ்கலை, குபேரன்-கௌரிதேவி என அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிப்பது இக்கோயிலின் மிக சிறப்பம்சமாகும்.
வேறென்ன சிறப்பு?
தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.
பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் ஆகியோரும் பிரகாரத்தில் வீற்றிருக்கிறார்கள்.
அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பக விருட்சமும் அமைந்துள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
சிவராத்திரி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகியவை இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
பதவியிழந்தவர்களுக்கு மீண்டும் பதவி கிடைக்கவும், பதவி உயர்வு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கவும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சிவபெருமானுக்கு பிரதோஷ தினத்தன்று வில்வமாலை அர்ச்சனை செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special Palli kondeshwarar temple