சிவபெருமானின் நடனக்காட்சி.. குழந்தை வடிவில் எமதர்மன்.. அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்.!
Today special neelivaneshwarar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பைஞ்ஞீலி என்னும் ஊரில் அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருச்சியில் இருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் திருப்பைஞ்ஞீலி உள்ளது. திருப்பைஞ்ஞீலி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தலத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளுகிறார்.
இத்தலத்தில் எமனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. சிவன் மற்றும் அம்பாளுடன் முருகன் இருக்க, சுவாமி பாதத்தின் கீழ் குழந்தை வடிவில் எமதர்மன் இருக்கிறார்.
மூலவர் சன்னதியை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் வசிஷ்ட முனிவருக்கு சிவபெருமான் நடனக்காட்சி அருளியுள்ளார். அதனால் இத்தலத்திற்கு மேலச்சிதம்பரம் என்ற பெயர் வந்தது.
மற்ற தலங்களில் இல்லாத சிறப்பு இங்கு உண்டு. அம்மனுக்கு இரண்டு சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர்.
வேறென்ன சிறப்பு?
இக்கோயிலில் திருமண தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டி பரிகார பூஜைகள் செய்கின்றனர்.
இத்தலத்தில் அறுபதாம் கல்யாணமும், ஆயுள் விருத்தி ஹோமமும் அதிகளவில் நடத்துகின்றனர்.
இராவணன் வந்து வழிபட்டுச் சென்றதால் இக்கோயிலின் ராஜகோபுரம் இராவணன் திருவாயில் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது.
இக்கோயிலுக்குள்ளும், வெளிப்பகுதிகளிலும் சப்த தீர்த்தம், விசாலத் தீர்த்தம், எமத் தீர்த்தம், கல்யாணத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அப்பர் தீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகிய 7 தீர்த்தங்கள் உள்ளன.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவமும், அப்பர் குரு பூஜையும், தைப்பூசத்தில் எமனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.
நீள்நெடுங்கண் நாயகி சன்னதியில் நவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
இழந்த பணி வாய்ப்புகள் கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, ஆயுள் நீடிக்க இங்கு பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. எமன் சன்னதியில் ஆயுள் ஹோமங்கள் செய்து பிரார்த்தனை செய்கின்றனர்.
திருமணத்தடை நீங்க இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அன்னதானம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special neelivaneshwarar temple