நாகர்களுடன் விநாயகப்பெருமான்.. ராமசந்திரமூர்த்தி.. அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோயில்...!!
Today special kodhantaramaswamy temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் என்னும் ஊரில் அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
கருவறையில் தெற்குமுகமாக கல்யாண கோலத்தில் சீதாதேவி, லட்சுமணர் மற்றும் ராமசந்திரமூர்த்தி எழுந்தருளியுள்ளனர்.
மூலவர் கோதண்டராமஸ்வாமி இரு நிலை விமானத்துடன் காட்சியளிக்கிறார்.
ராமர் சன்னதி கருவறையின் முகப்பில் கலைநயமிக்க கற்சிற்பங்களும், வெள்ளித்தகடுகள் பொருத்தப்பட்ட கதவுகளில் அஷ்ட லட்சுமிகளின் திருவுருவமும் அழகுற காட்சி தருகின்றன.
இத்தலத்தில் ராமபிரானும், அனுமனும் எதிர் எதிரே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத பெரும் சிறப்பு.
பிரகாரத்தின் மேல் நிலையில் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், சிவன், விநாயகர், ஐயப்பன், ராமபிரான் பட்டாபிஷேகம் என சுதை சிற்பங்கள் கலை நயத்துடன் காட்சியளிக்கின்றன.
வேறென்ன சிறப்பு?
ராமர் சன்னதியின் பின் பகுதியில் வில்வமரத்தின் அடியில் வில்வ லிங்கேஸ்வரரும், அரசமர மேடையில் நாகர்களுடன் விநாயகப்பெருமானும் காட்சியளிக்கின்றனர்.
ராஜகோபுரம், துவஜஸ்தம்பம் ஆகியவற்றை கடந்து வந்தால் கருவறைக்கு எதிரே இரு கரம் கூப்பி வணங்கியபடி ஆஞ்சநேயரும், இவருக்கு மேற்கே விநாயகப்பெருமானும் அருள்கிறார்கள்.
ராமர் சன்னதிக்கு கிழக்கு பக்கமாக விசாலமான மண்டபத்தில் நவகிரகங்களுக்கு என தனிச்சன்னதி அமைந்துள்ளது.
கருவறையின் பின்புறத்தில் சுவாமி உலா வருவதற்கு ஏதுவாக சொர்க்க வாசல் அகலமாக அமைக்கப்பட்டுள்ளது.
சுற்று பிரகாரத்தில் நிருத்த கணபதி, சித்தி, புத்தி கணபதி, பால கணபதி, புன்னைமர கிருஷ்ணன், பத்ராச்சல ராமர், பூஜித ராமர், தசாவதார ராமர், யோக ராமர் என கற்சிற்பங்கள் நேர்த்தியாக காட்சியளிக்கின்றன.
இத்தலத்தில் நித்ய கணபதி ஹோமம், திருவோண நட்சத்திரத்தன்று மகாசுதர்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம் ஆகியவை சிறப்பாக நடைபெறும்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
பிரதோஷம், தமிழ் வருடப்பிறப்பு, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, ஆருத்ரா தரிசனம், சங்கராந்தி, பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் ராமருக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special kodhantaramaswamy temple