போர்க்கோலத்தில் அபூர்வ ஆஞ்சநேயர்..இளநீர் கட்டி பிரார்த்தனை.. அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில்.!
Today special abayavarathar Anjaneyar kovil
இந்த கோயில் எங்கு உள்ளது?
திண்டுக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மலைக்கோட்டையின் அடிவாரத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் மூலவரான ஆஞ்சநேயரின் கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.
பொதுவாக, ஆஞ்சநேயருக்கு பெருமாளுக்குரிய சனிக்கிழமையே உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனால், இத்தலத்தில் மூலவரை சிவபெருமானின் அம்சமாக வணங்கப்படுவதால், வியாழக்கிழமைகளில் வடை மாலை அணிவித்தும், தயிர் சாதம் படைத்தும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
மூலவர் சன்னதியின் பின்புறம் வேணுகோபாலர் சன்னதி அமைந்துள்ளது. இவருக்கு ரோகிணி நட்சத்திர நாளில் திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கிறது.
வேறென்ன சிறப்பு?
பெரும்பாலான ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால், இத்திருக்கோயிலில் கிரக, ஜாதக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வேண்டிக் கொள்கின்றனர்.
ராமவதாரத்தின் போது, பெருமாள் ஆகிய இராமருக்கு சிவபெருமானே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்தார். இதை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலையின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
இத்திருக்கோயிலில் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி போன்றவைகள் கொண்டாடப்படுகின்றது.
தை அமாவாசை அன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெறுகின்றது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் கோயில் தீர்த்தக்கரையில் தாலிக்கயிறு மாற்றுகிறார்கள். துவங்கும் செயல்களில் தடையின்றி, வெற்றி கிடைக்கவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் வெற்றிலை மற்றும் வடை மாலை அணிவித்தும், வெண்ணெய் காப்பு சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.
English Summary
Today special abayavarathar Anjaneyar kovil