தினம் ஒரு திருத்தலம்.. 108 விநாயகர்.. அருள்மிகு 108 நன்மை தரும் விநாயகர் திருக்கோயில்.!
Today special 108 vinayagar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோபாலசமுத்திரக்கரை பகுதியில் அருள்மிகு 108 நன்மை தரும் விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் கோபாலசமுத்திரக்கரை என்னும் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இக்கோயிலில் 32 அடி உயர விநாயகர் சிலை அமைந்துள்ளது. பக்தர்களே அபிஷேகம் செய்யும் பொருட்டு '108" விநாயகர் சிலைகள் இங்கு உள்ளன.
16 அடி உயரத்தில் கஜமுக விநாயகர் மற்றும் ராஜகணபதி ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.
இக்கோயிலின் குளக்கரையை சுற்றிலும் நடைப்பயிற்சி மேடை அமைத்து விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வேறென்ன சிறப்பு?
இக்குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட 2 அடி உயர ஆதி விநாயகரை போன்று 108 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஐயப்பனும், தட்சிணாமூர்த்தியும் தனிச்சன்னதியில் காட்சி தருகின்றனர்.
இக்கோயிலில் பக்தர்கள் தங்களது கோரிக்கையை திருஓலை சீட்டு மூலம் இறைவனிடம் அனுமதி பெறுவது சிறப்புமிக்கதாக உள்ளது.
சித்திரை முதல் தேதியில் சிவபெருமான் மீது சூரிய ஒளி படர்வது சிறப்பான ஒன்றாகும்.
இக்கோயிலில் அண்ணாமலை, உண்ணாமலை அம்மனும், சீனிவாசப்பெருமாள், சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
மகாலட்சுமி, தேவி கருமாரியம்மன், ஆஞ்சநேயர், துர்க்கை, முருகன், மதுரை வீரன், சமயபுரம் மாரியம்மன், கருப்பண்ணசாமி ஆகியோர் சிலைகளும் இங்கு உள்ளன.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், மகாசங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இக்கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
கடன் பிரச்சனையில் இருந்து தீர்வு காண்பதற்காக மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நகர்வலம் வந்து விநாயகரை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special 108 vinayagar temple