ஸ்ரீரங்கத்தில் இன்று சொர்க்கவாசல் திறப்பு..!!
today sorgavasal open
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
வழக்கமாக மார்கழி மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி வரும். ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வருகிறது. 19 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அபூர்வ நிகழ்வு வரும் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் பூபதித்திருவிழா எனப்படும் தைதேர் உற்சவம் தை மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் நடக்க வேண்டும் என்பது நியதி. இந்த வருடம் தை மாத புனர்பூச நட்சத்திரம் தை 4ஆம் தேதியே வருவதால் வைகுண்ட ஏகாதசியை ஒரு மாதம் முன்னதாக கார்த்திகை மாதத்தில் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எனினும் தமிழகம் மட்டுமின்றி நாடெங்கிலும் உள்ள மற்ற வைணவத் தலங்களில் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி அன்றே (13.01.2022) பரமபத வாசல் திறப்பு நடைபெறும்.
ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா :
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கம் கோவிலில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கியது.
பகல்பத்து உற்சவத்தின்போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பார்.
அந்தவகையில், பகல்பத்து உற்சவத்தின் 10வது நாளான நேற்று 13.12.2021 (திங்கட்கிழமை) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
சொர்க்கவாசல் (பரமபத வாசல்) நாளை திறப்பு :
இன்று 14.12.2021 (செவ்வாய்க்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். இன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் (லக்னப்படி) எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருகினர்.
இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். காலை 7 மணி வரை சேவார்த்திகள் அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.