தினம் ஒரு திருத்தலம்.. குலோத்துங்க சோழீஸ்வரருடைய மகாதேவர்.. சக்தி கணபதி..!!
Soleswarer temple in perambakkam
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் :
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க.
கோயில் எங்கு உள்ளது :
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் என்னும் ஊரில் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள் :
தெற்கு நோக்கி அமைந்த வாசல் கொண்ட இக்கோயிலானது சோழர்களால் கட்டப்பட்டது.
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் மூலவருக்கு குலோத்துங்க சோழீஸ்வரருடைய மகாதேவர் என்னும் திருநாமமே சுருங்கி சோழீஸ்வரர் என்றாகிவிட்டது.
இத்திருக்கோயிலில் கிழக்கு நோக்கி லிங்க ரூபமாய் காட்சியளிக்கும் சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது அவரின் திருமேனியில் நரம்பு மண்டலம் ஓடுவது போன்ற அமைப்பைக் காண முடியும்.
இத்தலத்தில் உள்ள காமாட்சி அம்மன் பக்தர்களின் குறையை தீர்க்கும் கருணைக்கடலாக, தெற்கு திசையை நோக்கி அருள்பாலிக்கிறாள்.
நாடி, நரம்பில் ஏற்படும் பாதிப்புகளை மூலவரான சோழீஸ்வரர் நிவர்த்தி செய்கிறார் என்பது நூற்றுக்கணக்கான பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
வேறென்ன சிறப்பு :
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் தல விருட்சம் வில்வம் மற்றும் தீர்த்தம் கூவம் ஆறு ஆகும்.
இத்தலத்தில் உள்ள கொடிமரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை, பிரதோஷ காலத்தில் தன்வந்திரி பகவான் வலம் வந்து சோழீஸ்வரரை தொழுகின்றார் என்ற ஐதீகம் உண்டு.
இந்த கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் விநாயகரை சக்தி கணபதி என போற்றுகிறார்கள். இவர் வெறும் பெயரில் மட்டும் சக்தியை கொண்டிருக்கவில்லை. தன்னை நாடி வந்து சிரத்தையுடன் தொழும் பக்தர்களின் குறைகளை நீக்கும் சக்தி உடையவர்.
வள்ளி, தெய்வானை சமேத முருகன், துர்க்கை, ஐயப்பன், நாகர் ஆகியோர் சன்னதிகளும் இத்திருக்கோயிலில் அமைந்துள்ளன.
திருவிழாக்கள் :
காணும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
பிரார்த்தனைகள் :
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் நரம்புக் கோளாறு நீங்க பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்கள் :
இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
English Summary
Soleswarer temple in perambakkam