தோஷங்களை நிவர்த்தி செய்யும்.. சதுர்த்தி விரதம்.! நாளை மறந்துவிடாதீர்கள்.!
Sangadahara sathurthi For dhosha nivarthikal
மூலாதார மூர்த்தியாய், ஓங்கார பிரணவப் பொருளாய், முழுமுதற் கடவுளாய், தனக்கு மேல் நாயகன் இல்லாததால் 'விநாயகர்" என்றே புகழ்ந்து துதிக்கப்படும் கணபதிக்கு மிக உகந்த விரதம் சதுர்த்தி விரதமாகும். அதிலும் தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்றே சிறப்பிக்கப்படுகிறது.
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை அதாவது துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும்.
ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர் விநாயகர்.
ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றியடையும்.
இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.
அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது, பாண்டவர்கள் துரியோதனனை வென்றது போன்றவை நிகழ்ந்ததும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையால்தான்.
விரதம் இருக்கும் முறை :
சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.
மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொள்ள வேண்டும்.
அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு மற்றும் அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.
விரதத்தின் பலன்கள் :
இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகின்றவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.
மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.
சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெருமளவு குறையும்.
சங்கடங்களை நீக்கி அளவில்லாத நன்மைகளை தரும் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து விநாயகப் பெருமானின்அருளைப் பெறுவோம்.
English Summary
Sangadahara sathurthi For dhosha nivarthikal