இன்று மகாசிவராத்திரி..விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு.. மகாசிவராத்திரி விரதமுறைகள்...!!
How to pray maha Shivaratri
மாதந்தோறும் சிவராத்திரி விரதம் மேற்கொள்வது மிகப்பெரிய புண்ணியம். நம்முடைய பாவங்களெல்லாம் காணாமல் போகும். அப்படி மாதந்தோறும் விரதம் இருக்க இயலாதவர்கள், மாசியில் வரும் மகாசிவராத்திரி நாளில் விரதம் இருந்தால் தெரியாமல் செய்த பாவங்களும், தெரிந்தே செய்த பாவங்களும் நீங்கும். கர்மவினைகள் அகன்று புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி (01.03.2022) மகாசிவராத்திரி வருகிறது. மகாசிவராத்திரி என்றால் 'சிவபெருமானின் சிறந்த இரவு' என்று பொருள். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவார்கள்.
விரத முறைகள் :
சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்.
விரதம் மேற்கொள்ளும்போது உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். சில கோவில்களில் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டே இருக்கிறார்கள். நம் உடல் உணவின்றி சிறிது வருந்தும்போது தான் எளிதாக வசப்படும்.
நாம் சொன்னபடி நம் மனது கேட்கும். அதற்காகத் தான் விரதமே. அவ்வாறு கேட்கும் மனதை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். மறுநாள் காலை குளித்து பூஜைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
சிவராத்திரியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவனை வழிபடும்போது சிவாயநம என உச்சரிக்க வேண்டும். அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. முடியாதவர்கள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக கோவிலில் ஒப்படைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கு பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
வீட்டில் சிவராத்திரி பூஜை செய்யும் முறை :
வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே நான்கு ஜாமமும் பூஜை செய்யலாம். அன்று பகலில் சாப்பிடாமல், மாலையில் பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் துவக்க வேண்டும்.
மாலை 6.30, இரவு 9.30, நள்ளிரவு 12.30, அதிகாலை 3.00மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சிவாயநம நமசிவாய என மந்திரத்தை சொல்லலாம்.
சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை பக்தியுடன் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் கேட்கலாம். விழிக்கிறோம் என்ற பெயரால் சினிமா, டிவி பார்க்கக்கூடாது.
வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.
English Summary
How to pray maha Shivaratri