சபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்! புதிய குழப்பம்! -உடனடி முன்பதிவு எண்ணிக்கை மாற்றம்
Devotees flood Sabarimala New chaos Immediate change booking number
சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 16-ஆம் தேதி மாலை திறக்கப்பட்ட கோவில் நடை, தினமும் பக்தர்களின் அலைமோதும் தரிசனத்தால் சிலம்பிட்டுவருகிறது. ஆன்லைன் முன்பதிவில் 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20,000 பேரும் தினமும் அனுமதிக்கப்பட்டதால், கடந்த வாரம் மலைப்பாதை முதல் பம்பை, சன்னிதானம் வரை கூட்ட நெரிசல் வெடித்தது.
நெரிசலில் சிக்கிய பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து, “கூட்ட நெரிசலை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த வேண்டும்” என்று கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டது. அதன்படி, உடனடி முன்பதிவு எண்ணிக்கை 20,000-இலிருந்து 5,000-ஆக குறைக்கப்பட்டது; மேலும் பம்பை உள்ளிட்ட மூன்று ஸ்பாட் புக்கிங் மையங்கள் உடனடியாக மூடப்பட்டன.

இந்த நடவடிக்கை காரணமாக சன்னிதான வழிகளில் உருவாகியிருந்த மக்கள் அலை தணிந்தது.பின்னர், பக்தர்கள் வருகைக்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை மாற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று முதல் 7,000–8,000 வரை உயர்த்தும் செயல்முறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டாலும், முதல் நாளாகிய இன்று ஸ்பாட் புக்கிங் 5,000-ஆகவே தொடர்ந்தது.
இதற்கிடையில், சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கேரள டிஜிபி ரவுடா சந்திரசேகர் நேரில் சன்னிதானம் வந்து, தரிசனம் செய்ததுடன், பாதுகாப்பு பணிகளை முழுமையாக ஆய்வு செய்தார். “பக்தர்கள் பாதுகாப்பே முதன்மை” என அவர் உறுதியாக தெரிவித்தார்.
அதே நேரத்தில், ஆன்லைன் முன்பதிவு இல்லாமல் அதிக அளவில் பக்தர்கள் இன்று சபரிமலைக்கு வருவதால் நிலக்கல், பம்பை பகுதிகள் மக்கள் கடலாக மாறின. பதினெட்டாம் படி வழியாக தரிசனம் பெற விரைந்த பக்தர்கள், சரங்குத்தி வரையிலான வரிசையில் நின்று 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். நெரிசல் கட்டுக்குள் இருக்கும் முறையில் நூற்றுக்கணக்கான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
English Summary
Devotees flood Sabarimala New chaos Immediate change booking number