பெண்கள் பயமின்றி நடக்க வேண்டும்! - 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களை கொடியசைத்த முதல்வர் ஸ்டாலின்...!
Women should walk without fear Chief Minister Stalin flagged off 80 pink patrol vehicles
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (11.11.2025) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 80 புதிய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களை கொடியசைத்து சேவையில் தொடங்கி வைத்தார்.மொத்தம் 12 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட இந்த வாகனங்கள், மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு பெண்கள் மீது நிகழும் குற்றங்களை தடுக்கவும், உடனடி பாதுகாப்பு உதவியை வழங்கவும் செயல்படவுள்ளன.

காவல்துறையின் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கில், அரசு தொடர்ந்து புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், நவீன வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் 2025–2026ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட ‘பெண்கள் பாதுகாப்பு மேம்பாட்டு திட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் தாம்பரம், ஆவடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரை மாநகரப் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் 24 மணி நேரமும் ரோந்து செய்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) வெங்கடராமன், மேலும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
English Summary
Women should walk without fear Chief Minister Stalin flagged off 80 pink patrol vehicles