திமுக கூட்டணியில் நீடிக்குமா முஸ்லிம் லீக்...? - ஜூன் 20-ந் தேதி இறுதி முடிவு அறிவிக்கிறார் காதர் மொய்தீன்...! - Seithipunal
Seithipunal


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கடலூர் பரங்கிப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விரிவாக கருத்து பகிர்ந்தார்.அப்போது அவர் பேசுகையில், தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கணிப்புகளை முன்வைத்திருந்தாலும், மக்கள் அளித்த தீர்ப்பு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பு த.வெ.க. பல தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறலாம் என்றே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டதாகவும், ஆனால் தேர்தல் களத்தில் நிலைமை வேறு விதமாக இருப்பதை தங்களது கட்சியினர் முன்கூட்டியே உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மகளிர் அணி நிர்வாகிகள், பெண்கள் மத்தியில் புதிய அரசியல் மாற்றத்திற்கான மனநிலை உருவாகி வருவதாக தங்களிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். இதுகுறித்த தகவலை உடனடியாக தி.மு.க. தலைமையிடத்துக்கும் எடுத்துரைத்ததாகவும், அதன் பின்னர் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது தமக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே, தமிழக மக்கள் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை விரும்பி வாக்களித்திருப்பது தெளிவாகப் புலப்பட்டதாக காதர் மொய்தீன் கூறினார்.த.வெ.க. தனிப்பெரும்பான்மையைப் பெறாத சூழலில், மாநிலத்தில் அரசியல் நிலையற்ற தன்மை உருவாகக் கூடாது என்பதற்காக தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான கட்சிகள் எந்த நிபந்தனையும் இன்றி த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அண்ணா காலம் முதல் தற்போதைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. வரை தங்களது கட்சி நீண்டகால நட்புறவை பேணி வந்ததாகவும், அந்த உறவை விட்டு விலகுவது எளிதான முடிவாக இருக்கவில்லை என்றும் கூறினார்.முஸ்லிம் சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய சூழல் இருந்ததாகவும், த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்காத பட்சத்தில் அரசியல் சமநிலை மாறி விடும் என்ற அச்சத்தை பலர் தங்களிடம் வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது பல்வேறு மாற்று அரசியல் ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்த காதர் மொய்தீன், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்மொழிவது தொடர்பான கருத்துகள் பேசப்பட்டதாக அறிந்தபோது அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.அதன்பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்தும் யோசனையும் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அப்போது திருமாவளவன் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையை சுட்டிக்காட்டியதாக கூறினார்.

அதற்கு, பின்னர் இடைத்தேர்தல் மூலம் உறுப்பினராக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாகவும், அந்த அணுகுமுறையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்தார்.மக்கள் நேரடியாக வாக்களித்தது விஜய்க்காகவே என்பதால், அவரை புறக்கணித்து மாற்று தலைமையை உருவாக்கும் முயற்சி ஜனநாயகத்தின் அடிப்படை உணர்வுகளுக்கு முரணானது என அவர் வலியுறுத்தினார்.

மேலும், சட்ட ரீதியிலும், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் ஆவலையும் கருத்தில் கொண்டு, தங்களது கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் குழு கூடி த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுத்ததாக காதர் மொய்தீன் தெரிவித்தார்.

இதற்கிடையில், வருகிற 20-ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதா அல்லது புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்வதா என்பது குறித்து விரிவாக ஆலோசித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Muslim League remain DMK alliance Kader Moideen announce final decision June 20th


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->