கன்னியாகுமரி மாவட்டத்தில் அரச சட்டக் கல்லூரி அமைக்கப்படுமா..? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில்..!
Will a government law college be set up in Kanyakumari district Law Minister Raghupathi
நிதி நிலைமை சரியானால் எல்லா மாவட்டங்களுக்கு சட்டக் கல்லூரி கொண்டு வரப்படும் என தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நாகர்கோவில் தொகுதி பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி அவர்கள், ''கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்து பேசியதாவது:-

இன்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் உள்ளனர் என்றும், சென்னையிலும், மதுரையிலும் இருக்கும் 02 பெண் நீதிபதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் அவர் இது குறித்து மேலும் பதிலளிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எப்படியும் படித்து முன்னேறி விடுவார்கள். அதனால் எந்த விதமான கவலையும் கிடையாது. எந்த இடத்தில் பார்த்தாலும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், படித்தவர்களாக வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், கன்னியாகுமரியிலும் ஒரு தனியார் சட்டக் கல்லூரி உள்ளது எனவும், அங்கு கட்டணம் அதிகம் என்று சொன்னீர்கள். நெல்லையிலும் அரசு சட்ட கல்லூரி உள்ளது என்று கூறினார்.
இதனை தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி வேண்டும் என்பது அரசின் கொள்கைதான். ஆனால், அது கொள்கை அளவில் இருக்கிறதே தவிர, நிதிநிலையின்படி அதை நிறைவேற்ற இயலாத சூழலில் இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும், நிதி நிலைமை சரியானால் நிச்சயமாக எல்லா மாவட்டங்களுக்கு சட்டக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று நாகர்கோவில் தொகுதி பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தியின் கேள்விக்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்தார்.
English Summary
Will a government law college be set up in Kanyakumari district Law Minister Raghupathi