தமிழ்நாடு அமைச்சரவை உத்தேசப் பட்டியல்; நாளை 20 அமைச்சர்கள் பதவியேற்பு; யாருக்கெல்லாம் வாய்ப்பு..?
Who stands a chance in the tentative list for the Tamil Nadu Cabinet
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. தமிழ்நாடு அமைச்சரவைக்கு மீதமுள்ள 20 அமைச்சர்கள் நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கவுள்ளனர்.
இதில், காங்கிரஸில் இருந்து வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோர் இடம் பெறுவதை அக்கட்சி உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், அமைச்சரவையில் ஐ.யூ.எம்.எல். கட்சி ஒரு அமைச்சரை பெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் கூறியுள்ளார். மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காலையில், விசிக அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என அழைப்பு விடுத்திருந்த நிலையில், இது குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் பதில் கொடுத்துள்ளார்.

இந்த சூழலில், நாளை விரிவாக்கம் செய்யப்பட இருக்கும் அமைச்சரவையில் 20 பேர் பதவி ஏற்பார்கள் என கூறப்படுகிறது. அதன்படி, புதிய அமைச்சர்களாக யாருக்கெல்லாம் வாய்ப்பு எனும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த உத்தேசப் பட்டியலின் படி, விசிகவில் இருந்து வன்னி அரசு, ஐ.யூ.எம்.எல். கட்சியில் இருந்து ஷாஜகான் ஆகியோர் பதவி ஏற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தவெகவில் இருந்து பர்வேஸ், பார்த்திபன், ரஞ்சித்குமார், ராஜ்குமார், மரிய வில்சன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தகவல் வலியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை முதலமைச்சர் உட்பட மொத்தம் 34 பேர் அமைச்சரவையில் இடம் பெறலாம். அந்த வகையில் முதலமைச்சர் விஜய் உட்பட, 10 பேர் ஏற்கனவே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இந்தச் சூழலில் நாளை 20-க்கும் மேற்பட்டோர் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, நாளை (21ஆம் தேதி) காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளநிலையில், காலை சுமார் 07.30 மணி அளவில் அதிகாரப்பூர்வ அமைச்சரவை பட்டியல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Who stands a chance in the tentative list for the Tamil Nadu Cabinet