நூல் விலை உயர்வால் நெசவுத் தொழில் முடங்கும் அபாயம்...! வேல்முருகன் சுட்டிக்காட்டி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை...!
weaving industry danger collapsing due increase yarn prices Velmurugan points out and requests central and state governments
தமிழகத்தின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் நெசவுத் தொழில் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சிறு மற்றும் குறு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
“மத்திய, மாநில அரசுகள் நெசவுத் தொழிலை அழிக்கத் துடிக்கிறதா? நூல்விலை உயர்வுக்கு யார் பொறுப்பு?” என கேள்வி எழுப்பியுள்ள அவர், நெசவாளர்களின் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான நெசவுத்தொழில், மூலப்பொருள் பற்றாக்குறை, மின்சாரக் கட்டண உயர்வு, சந்தையில் நிலவும் மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்கனவே கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நூற்பாலைகள் படிப்படியாக நூல் விலையை உயர்த்தி வருவதாகவும், தற்போது ஒரு கிலோ நூலுக்கு மொத்தமாக ரூ.30 முதல் ரூ.40 வரை விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தொடக்கத்தில் நூலின் வகையைப் பொறுத்து ஒரு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர்த்தப்பட்டதாகவும், பின்னர் பருத்தி விலை அதிகரிப்பு மற்றும் வரத்து குறைவு ஆகியவற்றை காரணமாகக் காட்டி மேலும் ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய மாதத்திலும் ஒரு கிலோவுக்கு மேலும் ரூ.10 வரை விலை அதிகரிக்கப்பட்டதால், ஒட்டுமொத்தமாக நூல் விலை கிலோவுக்கு ரூ.40 வரை உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தொடர்ச்சியான நூல்விலை உயர்வால், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலையில் துணிகளை உற்பத்தி செய்து வழங்க முடியாத நிலைக்கு நெசவு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நூல் விலை உயர்வை கணக்கில் கொள்ளாமல் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்படி துணிகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் தாக்கமாக திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சிறு மற்றும் குறு விசைத்தறி, கைத்தறி கூடங்கள் முடங்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் இத்தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதிக்காமல் தங்களது அதிகார வரம்பிற்குள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இடைக்கால நிவாரணத் தொகையையும், உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்வதற்கான ஊக்கத்தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருத்தி மற்றும் நூலை முன்கூட்டியே கொள்முதல் செய்து, நெசவாளர்களுக்கு சந்தை விலையைவிட குறைந்த விலையில் தடையின்றி மானியத்துடன் வழங்குவதற்கான நிரந்தர அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், உற்பத்திச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தின் உச்சவரம்பை மேலும் உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.பள்ளி சீருடைகள், பொங்கல் வேட்டி-சேலை உள்ளிட்ட தமிழக அரசின் துணி கொள்முதல்களில் உள்ளூர் கூட்டுறவு அமைப்புகளுக்கும், நலிவடைந்த நெசவாளர் சங்கங்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட வாரியாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு நெசவுக் குழுமங்களை கண்டறிந்து, அவற்றை மீட்டெடுப்பதற்கான சிறப்பு நிதி மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.பருத்தி மற்றும் நூல் விலையில் மாதந்தோறும் ஏற்படும் கட்டுப்பாடற்ற உயர்வைத் தடுத்து, நிலையான விலை நிர்ணய முறையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.உள்நாட்டு ஜவுளித் தொழிலின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்த பின்னரே மூலப்பருத்தி மற்றும் நூலை வெளிநாடுகளுக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சந்தையில் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி நூல் விலையை உயர்த்தும் வகையில் நடைபெறும் பதுக்கல் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்றும், பொருட்களின் விலையை ஊகத்தின் அடிப்படையில் உயர்த்தும் வணிக நடவடிக்கைகள் மீதும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.சிறு நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மூலப்பொருள் விநியோகம், சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்முதல் மானியங்களை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சிறு மற்றும் குறு நெசவு நிறுவனங்களின் நவீனமயமாக்கல் மற்றும் அன்றாட உற்பத்திச் செலவுகளுக்கான நிதித் தேவையை சமாளிக்கும் வகையில், குறைந்த வட்டியில் நீண்டகால கடனுதவித் திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.நெசவுத்தொழில் நலிவடைவது என்பது ஒரு தொழில்துறையின் வீழ்ச்சியாக மட்டும் பார்க்க முடியாது என்றும், தலைமுறை தலைமுறையாக இந்தத் தொழிலை நம்பி வாழும் எண்ணற்ற எளிய மக்களின் எதிர்காலமே இதனால் பாதிக்கப்படும் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நெசவாளர்களின் வீடுகளில் ஒலிக்கும் தறியின் ஓசை முழுமையாக நின்றுபோகும் நிலை ஏற்படுவதற்கு முன்பே மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
weaving industry danger collapsing due increase yarn prices Velmurugan points out and requests central and state governments