2016 தாக்குதல் வழக்கிலிருந்து விருதுநகர் எம்.எல்.ஏ. செல்வம் உட்பட 4 பேர் விடுதலை: ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Virudhunagar MLA Selvam and Three Others Acquitted in 2016 Assault Case by Srivilliputhur Special Court
விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் உட்பட நான்கு பேர் மீதான 2016-ஆம் ஆண்டு தாக்குதல் வழக்கில், அவர்களை முழுமையாக விடுதலை செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் பிரதிநிதிகள் மீதான சிறப்பு நீதிமன்றம் நேற்று முக்கிய தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கின் பின்னணி 2016-ஆம் ஆண்டுக்குச் செல்கிறது. விருதுநகர் முத்தால் நகர்ப் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகத் தொடர் குடும்பப் பிரச்சினைகள் இருந்துவந்துள்ளன. இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில், மனைவியின் சகோதரரான திவாகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வேல்முருகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வேல்முருகன் அளித்துப் புகாரின் அடிப்படையில், விருதுநகர் கிழக்குக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்த வழக்கில் திவாகர், செல்வம், பால மகேந்திரன் மற்றும் பால கர்ணன் ஆகிய நான்கு பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காலகட்டத்திலேயே, இரண்டாம் எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்த செல்வம், தேர்தலில் போட்டியிட்டு விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக (எம்.எல்.ஏ.) தேர்வானார்.
மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நடைமுறையின் கீழ், இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் மக்கள் பிரதிநிதிகள் மீதான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுபாஷினி நேற்று இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கினார்.
குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால், விருதுநகர் எம்.எல்.ஏ. செல்வம், திவாகர், பால மகேந்திரன் மற்றும் பால கர்ணன் ஆகிய நான்கு பேரையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Virudhunagar MLA Selvam and Three Others Acquitted in 2016 Assault Case by Srivilliputhur Special Court