'சிக்மா' திரைப்பட விழாவில் முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி: 'டிவிகே' முழக்கத்திற்குப் பெருவிரல் உயர்த்தி வரவேற்பு!
CM Vijays Son Jason Sanjay Speaks at Sigma Salem Event Reacts to TVK Chants and Shares Film Journey
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் விளம்பர விழா சேலத்தில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் சந்தீப் கிஷன் கதநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், நிகழ்வில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய் திரைப்படம் குறித்தும் தனது திரைப் பயணம் குறித்தும் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ஜேசன் சஞ்சய், "முதலில் எனது குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியபோது, அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் 'டி.வி.கே, டி.வி.கே' என உரக்க முழக்கமிட்டனர். இதைக் கேட்ட ஜேசன் சஞ்சய் புன்னகையுடன் தனது கட்டைவிரலை உயர்த்திக் காட்டி ரசிகர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், "பெரிய கஷ்டங்களில் இருந்து மீண்டு வந்து வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஒரு சராசரி மனிதனின் கதையே ‘சிக்மா’. இத்திரைப்படம் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
விழாவில் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு ஜேசன் சஞ்சய் அளித்த சுவாரசியமான பதில்கள்:
திரையரங்கில் பார்த்த முதல் படம்: 3 வயதில் பார்த்த ‘திருமலை’.
இயக்குநராகத் தூண்டிய திரைப்படம்: ‘சிட்டி ஆஃப் காட்’ (City of God).
இயக்குநரான செய்தியை முதலில் கூறியது: தனது தாயாரிடம்.
கல்லூரி வருகைப்பதிவு (Attendance): 40 சதவீதத்தைத் தாண்டியது இல்லை என நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் யாரும் இதைப் பின்பற்ற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
English Summary
CM Vijays Son Jason Sanjay Speaks at Sigma Salem Event Reacts to TVK Chants and Shares Film Journey