பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.. தமிழக அரசை விமர்சித்த விஜயகாந்த்..!!
vijayakanth statement for school student death
தனியார் பள்ளியில், கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு விவகாரம், தமிழக அரசை விமர்சித்த விஜயகாந்த்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், திருநெல்வேலி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
கொரோனா பரவல் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், வைரஸ் தொற்று குறைந்து, தற்போதுதான் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதுபோன்ற சூழலில் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து, மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம். பள்ளியின் சுவர் எந்த அளவிற்கு உறுதியாக உள்ளது என்பதை கூட ஆய்வு செய்யாமல் பள்ளி நிர்வாகம் எப்படி பள்ளியை திறந்தது.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் எந்த தவறும் செய்யாத பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் தற்போது பறிபோய் உள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பராமரிப்பின்றி மூடப்பட்டிருந்த பள்ளிகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பின்னரே, பள்ளிகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் 3 மாணவர்களின் உயிரிழப்பை தடுத்து நிறுத்தியிருக்கலாம். உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் பள்ளிகள் திறக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளில் தமிழக அரசு ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
vijayakanth statement for school student death