அதை மறக்கவே இல்லை’... ஓராண்டுக்குப் பிறகு விஜய் நினைவில் வைத்த சாலை விவகாரம்...! - அமைச்சர் ஆனந்த் தகவல்
Vijay remembered road issue after year Minister Anand information
சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, மலைப்பகுதி கிராமங்களுக்கான சாலை வசதி தொடர்பாக தி.மு.க. உறுப்பினர் பெரியசாமி மற்றும் அமைச்சர் ஆனந்த் இடையே சுவாரசியமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
விவாதத்தில் பேசிய பெரியசாமி, தங்களது ஆட்சிக் காலத்தில் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு முதல்-அமைச்சர் சாலைத் திட்டம் மட்டுமின்றி, பல்வேறு திட்டங்களின் கீழும் சாலைகள் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பணிகளில் பெரும்பாலானவை நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 5 சாலைப் பணிகள் மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தப் பணிகள் வனத்துறையின் அனுமதி கிடைக்காததால் தாமதமாகி வருவதாகவும், அவற்றுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பெரியசாமி கூறினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை சட்டசபையில் நினைவுகூர்ந்தார்.
அவர் கூறியதாவது,"திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி ஊராட்சிக்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல்-அமைச்சர் படப்பிடிப்புக்காக சென்றிருந்தார். அப்போது ஒரு காட்சிக்காக கரடுமுரடான பாதையில் வாகனத்தில் சென்ற அவர், திரும்பி வரும் வழியில் சுமார் ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்தார்.
அப்போது அந்த பகுதியில் நீண்ட காலமாக சாலை வசதி இல்லாததை கவனித்த முதல்-அமைச்சர், சொந்த செலவில் சாலை அமைக்கலாமா என கேட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.அதற்கு, அப்போது ஆட்சியில் இல்லாததால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், சாலை அமைக்க அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகமாக இருப்பதாக தான் கூறியதாகவும், ஆட்சி அமைந்ததும் அந்த பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.
அதன் பின்னர் முதல்-அமைச்சர் அந்த விஷயத்தை மறக்காமல் நினைவில் வைத்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தான் அமைச்சர் பதவி ஏற்ற 5-வது நாளிலேயே முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தாண்டிக்குடி கிராமத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என உத்தரவு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது அந்த சாலைப் பணிக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.இதனைத் தொடர்ந்து மீண்டும் பேசிய பெரியசாமி, அமைச்சர் குறிப்பிட்டது கூடம்நகர் பகுதி என்றும், அது பிரதான சாலைகளில் அமைந்துள்ள பகுதி அல்ல என்றும் விளக்கம் அளித்தார்.
கூடம்நகர் பகுதிக்கு சாலை அமைக்க தங்களது ஆட்சிக் காலத்திலேயே நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதற்கான பணியை மேற்கொள்ள வீரக்குமார் என்பவர் ஒப்பந்தம் பெற்றிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததால் பணி பாதியில் நின்றதாகவும் பெரியசாமி தெரிவித்தார்.பின்னர் மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தற்போது அந்த சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அந்தப் பணிக்கான நிதி ஒதுக்கீடும், ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தங்களது ஆட்சிக் காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டவை என்றும் பெரியசாமி குறிப்பிட்டார்.இதனால் மலைப்பகுதி சாலைப் பணிகள் தொடர்பாக சட்டசபையில் ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே சுவாரசியமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
English Summary
Vijay remembered road issue after year Minister Anand information