விஜய் செம அப்செட்! கரூருக்கு போவதற்குள் கைது செய்ய நினைத்த விஜய்! ₹35 கோடி குதிரை பேர வழக்கு.. செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்!
Vijay is extremely upset He had intended to get arrested before reaching Karur The 35 crore horse trading case Senthil Balaji granted anticipatory bail
₹35 கோடி குதிரை பேர விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று முன்ஜாமீன் வழங்கப்பட்டது. தவெக எம்.எல்.ஏவை விலைக்கு வாங்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைத்திருப்பது, தற்போது முதலமைச்சர் விஜய் தரப்புக்கு அரசியல் ரீதியாக பின்னடைவாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
தவெக ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவை விலைக்கு வாங்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி.அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கிய விவகாரம் தவெக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, இந்த நீதிமன்ற உத்தரவின் பின்னணியில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடும் அப்செட்டில் இருப்பதாக விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் விஜய் நாளை கரூர் மாவட்டத்திற்கு மிக முக்கியமான அரசியல் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க தவெக தரப்பு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், விஜய் கரூர் மண்ணில் கால் வைப்பதற்கு முன்பாகவே செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்பதே தவெக தரப்பின் திட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது. ₹35 கோடி குதிரை பேர புகாரில் அவரை அதிரடியாக கைது செய்வதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரனுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முயன்றது, தவெக அரசை நிலைகுலைய வைக்க சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அதற்குள் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய முன்ஜாமீன் உத்தரவு, இந்த ஒட்டுமொத்த வியூகத்தையும் தலைகீழாக மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
திட்டமிட்டபடி செந்தில் பாலாஜியை கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், விஜய் தரப்பு கடும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது அரசு தரப்பில் மிகக் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யான் வாதிடுகையில், இது சாதாரண வழக்கு அல்ல என்றும், ஆட்சியை நிலைகுலைய வைப்பதற்காக ஹவாலா பணத்தைப் பயன்படுத்தி 10 தவெக எம்.எல்.ஏக்களை இழுக்க முயன்ற மிகப்பெரிய சதி என்றும் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும், எம்.எல்.ஏவுக்கு ₹35 கோடியும், இடைத்தரகருக்கு ₹5 கோடியும் வழங்க பேரம் பேசப்பட்டதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
எனவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால், செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று வாதிட்டார்.
தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறப்படும் நாளுக்கும், புகார் அளிக்கப்பட்ட நாளுக்கும் இடையே இரண்டு நாட்கள் காலதாமதம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவிதமான ஆடியோ பதிவுகளும் இல்லை என்றும், வெறும் மொபைல் அழைப்பு விவரங்கள் மட்டுமே ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
கரூர் இடைத்தேர்தலை மனதில் வைத்தும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடனும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம்சாட்டியது.
எஃப்ஐஆரில் செந்தில் பாலாஜிக்கு இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் போதுமான ஆரம்பகட்ட ஆதாரங்கள் இல்லை என்று கருதிய நீதிமன்றம், அவருக்கும் அவரது சகோதரருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு வரை நீண்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை கிண்டி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல்களின் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் திரட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைத்திருப்பது, தவெக அரசுக்கு சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, விஜய்யின் கரூர் பயணத்திற்கு முன்பாக செந்தில் பாலாஜியை சட்டரீதியாக முடக்க நினைத்த திட்டம் மிஸ்ஸாகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் முதலமைச்சர் விஜய் கடும் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த வழக்கை தவெக அரசு அப்படியே விட்டுவிடப் போவதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றதாக கூறப்படும் முக்கிய நபரை பிடிப்பது, டிஜிட்டல் ஆதாரங்களை திரட்டுவது, சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி தொடர்புகளை நீதிமன்றத்தில் வலுவாக முன்வைப்பது ஆகியவற்றின் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த தவெக அரசின் சட்டப் பிரிவு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைத்ததால் முதல் கட்டத்தில் தவெக தரப்பின் கைது திட்டம் தடைபட்டிருந்தாலும், ₹35 கோடி குதிரை பேர வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. விஜய்யின் கரூர் பயணம், செந்தில் பாலாஜி தரப்பின் அடுத்தகட்ட நகர்வு, போலீசார் திரட்டும் புதிய ஆதாரங்கள் என இந்த விவகாரம் தமிழக அரசியலில் மேலும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
English Summary
Vijay is extremely upset He had intended to get arrested before reaching Karur The 35 crore horse trading case Senthil Balaji granted anticipatory bail