பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.. தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்.!!
vijakanth statement for police
சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை வெட்டி கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடு திருடியவர்களை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் துரத்தி சென்று பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் அவரை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணியில் இருந்த காவல்துறை அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்தவர்களை விரைவில் கைது செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
உயிரிழந்த காவல் அதிகாரியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்தாலும், கடமை தவறாத அதிகாரியின் உயிரிழப்பிற்கு அது ஈடாகாது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
English Summary
vijakanth statement for police