வைகோ பேச்சால் தவெகவுக்கு புதிய சிக்கல்! ‘குதிரைப் பேரம்’ குற்றச்சாட்டை மீண்டும் எழுப்பும் எதிர்க்கட்சிகள்!விஜய்யை இறங்கி அடிக்கும் திமுக!
Vaiko remarks land TVK in fresh trouble Opposition parties revive horse trading allegations DMK launches a scathing attack on Vijay
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விலகிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. அதன் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் தவெக மீது "குதிரைப் பேரம்" நடத்தியதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இந்த நிலையில், மதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோவிடம், உதயசூரியன் சின்னத்தில் வென்றுள்ள மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அவர்கள் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெறச் செய்வது தனது பொறுப்பு என்று முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வைகோவின் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் மீண்டும் தவெக மீது விமர்சனங்களை தீவிரப்படுத்தியுள்ளன.
திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, தனது சமூக வலைதளப் பதிவில், "குதிரைப் பேரம் நடந்ததாக நாங்கள் கூறியபோது மறுக்கப்பட்டது. தற்போது வைகோவின் பேச்சே அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரையும் தனது சமூக வலைதளப் பதிவில், உதயசூரியன் சின்னத்தில் வென்ற மதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்து தவெகவில் இணையுமாறு முதல்வர் விஜய் பேசியதாக வைகோ கூறியிருப்பது, 'குதிரைப் பேரம்' குறித்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மறுபுறம், தவெக தரப்பு இதற்கு முன்பே, பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது விருப்பத்தின் பேரிலேயே கட்சியில் இணைகின்றனர் என்றும், எந்தவித பேரமும் நடைபெறவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், வைகோவின் கருத்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு புதிய ஆயுதமாக மாறியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தவெக தரப்பு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படுகிறது.
English Summary
Vaiko remarks land TVK in fresh trouble Opposition parties revive horse trading allegations DMK launches a scathing attack on Vijay