"கட்சிக்காக சொத்துகளை விற்றவன் நான், ரூ. 50 கோடி வாங்கினேனா?" - அவதூறுகளுக்கு வைகோ ஆவேச விளக்கம்!
Vaiko Refutes 50 Crore Bribe Rumors Pledges MDMK Support to TVK
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் முதல்வர் விஜய்யிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 50 கோடி பணம் பெற்றதாகச் சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் பரவி வரும் விமரிசனங்களுக்கு வைகோ இன்று கடுமையான மறுப்பையும் விளக்கத்தையும் அளித்துள்ளார்.
அவதூறுகளும் வைகோவின் ஆவேசப் பதிலும்
சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுகவின் 32-ஆவது பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தன் மீது சுமத்தப்படும் பணப் புகார்களைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகக் கூறினார். "நானும், என் மகனும் திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ உள்ளிட்ட என் குடும்பத்தினரும் முதல்வர் விஜய்யைச் சந்தித்து ரூ. 50 கோடி வாங்கிவிட்டதாகத் திமுகவினர் மற்றும் சிலர் அபாண்டமாகப் பழி சுமத்தி வருகின்றனர். 32 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறேன். கட்சியை நடத்துவதற்காக எனது 103 ஆண்டுகள் பழமையான பூர்விகச் சொத்துக்களையும், சங்கரன்கோவிலில் இருக்கும் எனது வீட்டையும் விற்றிருக்கிறேன்.
இன்றைய மதிப்புக்கு ரூ. 30 முதல் 40 கோடி வரை விலைபோகக்கூடிய இரண்டே கால் ஏக்கர் நிலத்தைக் கட்சிக்காக இழந்தவன் நான். அப்படிப்பட்ட என்னைப் பார்த்து, விஜய்யிடம் பணம் வாங்கினேன் என்று பொய் பரப்புபவர்கள் மீது நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். முன்பு ஜெயலலிதாவிடமும் நான் கோடி கோடியாகப் பணம் வாங்கியதாக இப்படித்தான் அபாண்டமாகப் பேசினார்கள். அதில் ஒரு சதவீதம்கூட உண்மையில்லை" என்று மிக ஆவேசமாகத் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் தவெக-வுக்கு ஆதரவு
திமுகவுடன் இனி தோழமையில் இருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட வைகோ, மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்துப் பிரகடனம் செய்தார். "திமுக கூட்டணியில் இருந்து முழுமையாக விலகும் தீர்மானம் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) மதிமுக முழுமையாக ஆதரிக்கும். அதுமட்டுமன்றி, அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தவெக-உடன் முறையான அரசியல் தோழமை ஏற்படும் வகையில் நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்" என்று வைகோ திட்டவட்டமாக அறிவித்தார்.
English Summary
Vaiko Refutes 50 Crore Bribe Rumors Pledges MDMK Support to TVK