பெங்களூரு கார் குண்டுவெடிப்பு: இளம்பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டு காரோடு சேர்த்துத் தன்னைத்தானே வெடிக்கச் செய்த வாலிபர்!
Youth Killed in Car Explosion After Stabbing Co Passenger Near Tumakuru
பெங்களூருவில் இருந்து துமாகுரு நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்றில், பயணி ஒருவரே சக பெண் பயணியைக் கத்தியால் குத்திவிட்டு, காரின் உள்ளேயே நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை கொண்ட கொடூரச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரில் நேர்ந்த தகராறும் கத்திக் குத்தும்
நாகேந்திரா என்ற நபர் பெங்களூருவிலிருந்து துமாகுரு செல்வதற்காகத் தனியார் கார் ஒன்றை முன்பதிவு (Book) செய்துள்ளார். அந்த காரில் ரம்யா உல்லாஸ் (23) என்ற இளம் பெண்ணும் உடன் பயணம் செய்துள்ளார். காரைப் பிரவீன் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். கார் துமாகுரு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாகப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நாகேந்திராவிற்கும், ரம்யாவிற்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரம்யாவை ஓடும் காரிலேயே கொடூரமாகக் குத்தியுள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல் மற்றும் விபரீத முடிவு
நாகேந்திரா குத்தியதில் ரத்தக் காயமடைந்த ரம்யா, "என்னை நாகேந்திரா கத்தியால் குத்திவிட்டார்; அவரிடம் வெடிகுண்டும் இருக்கிறது" என்று ஓட்டுநர் பிரவீனிடம் கூச்சலிட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பிரவீன் உடனடியாக காரைச் சாலையோரம் நிறுத்தினார். கார் நின்ற அடுத்த நொடி, ரம்யா காரில் இருந்து கீழே குதித்துத் தப்பியோடினார். ஓட்டுநரும் பயந்துபோய் காரை விட்டு வெளியேறினார். ஆனால், அதற்குள் காரின் உள்ளே இருந்த நாகேந்திரா, தன் பையிலிருந்த டெட்டனேட்டர் (Detonator) உடன்கூடிய நாட்டு வெடிகுண்டை அதிரடியாக வெடிக்கச் செய்தார்.
காரோடு எரிந்து சாம்பலான வாலிபர்
குண்டு வெடித்த வேகத்தில் கார் முழுவதும் அடுத்த சில நிமிடங்களில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் காரின் உள்ளே மாட்டிக்கொண்ட நாகேந்திரா, உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார் தீப்பிடிப்பதற்குள் ஓட்டுநர் பிரவீன் இறங்கிவிட்டதால், அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த துமாகுரு போலீஸார், காயமடைந்த ரம்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நாகேந்திரா எதற்காக அந்தப் பெண்ணைக் குத்தினார், அவரிடம் வெடிகுண்டு எப்படி வந்தது என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Youth Killed in Car Explosion After Stabbing Co Passenger Near Tumakuru