எந்த பிரச்சனையும் இல்லை! முருக பக்தர்கள் மாநாட்டால் எங்கள் கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் நடக்கவில்லை...! - வானதி சீனிவாசன்
There is no commotion within our alliance due Muruga devotees conference Vanathi Srinivasan
கோவை மாவட்டம் பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று 50 ஆண்டு எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட நிறைவு தின நிகழ்ச்சி நடந்தது.இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி 'வானதி சீனிவாசன்' பார்வையிட்டார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,"இன்று இந்திய நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாள். 1974-ம் வருடம் ஜூன் 25-ந்தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன் தீமைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் நெருக்கடியான அந்த காலகட்டத்தில் இந்திய ஜனநாயகம் எப்படி இருந்தது என்பது குறித்து இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவதற்காக இந்த கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இன்று தி.மு.க., காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நெருக்கடி நிலை காலகட்டத்தில் தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் கொடுமைகளை அனுபவித்தார்கள். அரசியல் கட்சியினர் சிறைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள்.எதற்காக நாங்கள் இதைச் சொல்கிறோம். கடந்த கால வரலாற்றை மறக்கக்கூடாது. இதற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை.
இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என்பதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.இன்று திருப்பூரில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நெருக்கடி நிலை உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாங்கள் கல்வியில் அரசியல் செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டுவரப்பட்டது.
தனது அரசின் தோல்விகளை மறைக்கவே தி.மு.க.வினர் மத்திய அரசை குறை தெரிவிக்கிறார்கள்.தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை.முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை.
எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது.கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா தெளிவாக பேசி விட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை தாங்குகிறது. தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதி" என்று தெரிவித்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ் குமார், எஸ்.ஆர். சேகர், வீர தமிழச்சி சரஸ்வதி, காளப்பட்டி மண்டல தலைவர் உமாதேவி மற்றும் பலர் பங்கேற்றனர்.
English Summary
There is no commotion within our alliance due Muruga devotees conference Vanathi Srinivasan