திருச்சி கிழக்கு உள்ளிட்ட 05 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு..!
The High Court has banned the announcement of by elections for 05 constituencies including Trichy East
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக வெற்றிபெற்று விஜய் முதல்வராகியுள்ளார். இந்த தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டவிஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அத்துடன், அதிமுக எம்.எல்.ஏக்களான கரூர் தொகுதி எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சி.விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனையடுத்து, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'தேர்தல் வழக்குகளில், தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன்வைப்பதுண்டு.

இடைத்தேர்தல் நடத்தி எம்எல்ஏவை தேர்ந்தெடுத்த பின், தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்துவிட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற்படும் என்பதால், தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் 1967 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனால் தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது’ என வாதிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் வழக்குகள் குறித்த ஆவணங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்துக்கு வரப்பெறவில்லை என்றும், ஆகையால், இந்த வழக்கில் நிலைபாட்டை தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
அடுத்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், 'தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே முதல்வர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்யும்போது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை' என தெரிவித்துள்ளார்.

அதேப்போன்று, முதல்வர் விஜய் தரப்பில், 'இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் வாக்காளாராக இல்லாத மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்ய அடிப்படை உரிமை இல்லை என்றும், இடைத்தேர்தல் நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும்' எனவும் வாதிடப்பட்டது.
தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளதாவது;
ஜனநாயக நடைமுறையில் புனிதம் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் மனுதாரரின் அடிப்படை உரிமை குறித்த கேள்வி பொருந்தாது என்றும், தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன பிரச்சினை எழும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய வேண்டியுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
அதுவரை, இந்த 05 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலைஅறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
The High Court has banned the announcement of by elections for 05 constituencies including Trichy East