சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி, ராகுல் காந்தி! எந்த தேதி தெரியுமா?
The election field is heating up Prime Minister Modi and Rahul Gandhi will be visiting Tamil Nadu on the same day Do you know the date
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 28ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதே நாளில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கன்னியாகுமரி வர உள்ள நிலையில், ராகுல் காந்தியின் வருகையும் உறுதியாகி இருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முக்கிய தேசிய தலைவர்கள் ஒரே நாளில் மாநிலத்தில் களமிறங்குவது தேர்தல் அரசியலை மேலும் சூடுபிடிக்கச் செய்யும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 28ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து முக்கிய தலைவர்களையும் ஒரே மேடையில் திரட்ட பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டம், 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாஜக – அதிமுக கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அமையும் எனக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதி எண்ணிக்கைக்கு திமுக தரப்பு சம்மதிக்க மறுப்பதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடருமா அல்லது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த சூழலில்தான், காங்கிரஸ் கட்சி 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருவரும் ஒரே நாளில் தமிழகம் வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ராகுல் காந்தியின் இந்த வருகையின் போது, திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான முடிவு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது. மேலும், ஜனவரி மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால், பிப்ரவரி மாத இறுதியில் தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கருதப்படுகிறது.
மொத்தத்தில், ஜனவரி 28ஆம் தேதி தமிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய நாளாக அமையப்போகிறது என அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
English Summary
The election field is heating up Prime Minister Modi and Rahul Gandhi will be visiting Tamil Nadu on the same day Do you know the date